ஆயுத பூஜை 4நாள் விடுமுறை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆயுத பூஜை 4நாள் விடுமுறை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை:ஆயுதபூஜை, விஜயதசமி உள்பட 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப்படுகின்றன.

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளபடி சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு, மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி, தாம்பரம், கே.கே.நகர் என 5 இடங்களில் இருந்து இன்றுமுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள், மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்தும், ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்பவர்கள் கேகே நகர் பேருந்து நிலையத்திலிருந்தும், திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்தும், வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர் செல்வர்கள் வசதிக்காக பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஏற்கனவே வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 930 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.

சென்னையில் இருந்து இன்றும், நாளை சிறப்புப் பேருந்தகள் இயக்கப்படுவதாகவும், திருப்பூரில் இருந்து பிற ஊர்களுக்கு பயணிகள் செல்லும் வசதிக்காக 280 சிறப்பு பேருந்துகளும், கோவையிலிருந்து 717 சிறப்பு பேருந்துகளும் இன்று முதல் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, ஆயுத பூஜை முடிந்த பின் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் வசதிக்காக திருப்பூரிலிருந்து 266 சிறப்பு பேருந்துகளும் கோவையிலிருந்து 490 சிறப்பு பேருந்துகளும் பெங்களூரில் இருந்து 237 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.