நடிகர் : ஆனந்த், காதல் சுகுமார், மனோபாலா, கஜினி ராஜேஷ்,
நடிகை : ஸ்வேதா, வாலன்டினா
இயக்குனர் : ராம்கி ராமகிருஷ்ணன்
இசை : மரியா மனோகர்
ஓளிப்பதிவு : வி.ரவி
கதாநாயகன் குமாரும் அவரது நண்பரான பீர்பாலும் மோட்டார் பைக் கம்பெனி ஒன்றில் மெக்கானிக்குகளாக வேலை பார்க்கின்றனர்.
கதாநாயகனின் லட்சியம் என்னவென்றால் வாடகை வீட்டில் இருக்கும் அவரது குடும்பம், சொந்த வீடு கட்டி அதில் வசிக்க வேண்டும் என்பதுதான். இந்த லட்சியத்தில் காதல் கூட குறுக்கே வரக்கூடாது என்பதில் கண்டிப்புடன் இருக்கிறார்.
இந்நிலையில் குமாரை சந்திக்கும் கதாநாயகி மகாலட்சுமி, அவரது நல்ல குணங்களாலும் அவரது லட்சிய நோக்கத்தை கண்டதாலும் அவரை ஒருதலையாக காதலிக்க ஆரம்பிக்கிறார். இதனிடையே குமாரிடம் போனில் பேசும் மர்ம நபர் ஒருவர், 'மகாலட்சுமியின் பின்னால் சுற்றாதே, அவரை பார்க்காதே, அவரிடம் பேசாதே' என அடிக்கடி மிரட்டல் விடுக்க, அந்நபரிடம் 'நான் அவளைத்தான் காதலித்து கல்யாணம் செய்து கொள்வேன்.
உன்னால் முடிந்ததை செய்து கொள்' என்று குமார் சவால் விடுகிறார். அதன்படி குமார் தனது காதலை மகாலட்சுமியிடம் சொல்ல, காதல் தீ இருவருக்குள்ளும் பற்றிக் கொள்கிறது. அதைக் கொண்டாட தனது நண்பர்களுடன் இருவரும் பீச்சிற்கு செல்கின்றனர்.
அங்குள்ள ரவுடிகளால் ஏற்படும் தகராறில் காதல் ஜோடியை போலீஸ் கூட்டிச் செல்கிறது. கதாநாயகனை மீட்க அவரது கம்பெனி மேனேஜர் வருகிறார். கதாநாயகியை மீட்க அவரது பணக்கார அம்மாவான அப்புவும், அவரது அண்ணனான ராஜேஷும் வருகின்றனர்.
கதாநாயகியின் காதலைத் தெரிந்து கொள்ளும் அவரது அம்மா அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதுமட்டுமின்றி, 'உங்களது மகள் யாருடன் இருக்கிறாளோ அவர்களுக்கு அதிக அளவில் செல்வம் சேரும்' என்று ஒரு ஜோசியக்காரரின் வார்த்தையை நம்புகிறார்.
மேலும், ஜோசியக்காரரின் அறிவுரைப்படி தனது மகளை தன் மகனுக்கே கல்யாணம் செய்து வைக்க முயற்சிக்கிறார். இதனை அறிந்து கொள்ளும் கதாநாயகன் வில்லியின் சதித்திட்டங்களை முறியடித்தாரா இல்லையா? ஜோசியத்தை நம்பும் வில்லி என்ன ஆனார்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் திடீர் திருப்பங்களைக் கொண்டு படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன்.
கதாநாயகனாக வரும் புதுமுகம் ஆனந்த், தேர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காமெடி காட்சிகளில் கலகலப்பூட்டுகிறார். பாடல் காட்சிகளில் நன்றாக ஆடியிருக்கிறார். கதாநாயகியாக வரும் சுவேதா, கொள்ளை அழகு. கவர்ச்சி மழை பொழிந்தது மட்டுமின்றி, உணர்ச்சிகரமான காட்சிகளில் யதார்த்தமாகவும் நடித்திருக்கிறார்.
இருவருக்குமான காதல் காட்சிகள் கண்ணுக்கு நிறைவு. வில்லியாக வரும் கவிதாவின் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது. அவருடைய கதாபாத்திரத்தில் ஒன்றிப் போயிருக்கிறார். நாயகனின் நண்பனாக வரும் காதல் சுகுமார் சில இடங்களில் சிரிப்பூட்டுகிறார்.
மரியா மனோகரின் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கின்றன. குறிப்பாக 'ஓரத்துல... ஓரத்துல...' பாடல் மனதில் இடம்பிடிக்கிறது. பழக்கப்பட்ட காட்சிகள் படத்தில் இருந்தாலும், அதை சொல்லிய விதமும், திடீரென வரும் திருப்பங்களும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. அதை திறம்பட சேர்த்திருக்கிறார் இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன்.