இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம்

இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம்
இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம்

விக்கிமீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்திய
மொழிகளுக்கிடையிலான கட்டுரைகள் எழுதும் போட்டியில் தமிழ் மொழி முதல்
இடத்தை பெற்றுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த வேங்கைத் திட்டம் 2.0
என்றழைக்கப்படும் இந்த போட்டியில் தமிழ், இந்தி, பஞ்சாபி, மராத்தி, உருது உள்ளிட்ட
பல்வேறு மொழிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில், போட்டிக்கான காலகட்டத்தில் அதிகபட்ச கட்டுரைகள் மட்டுமின்றி,
பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையிலும் தமிழ் மொழி முதலிடத்தை பெற்றுள்ளது.

இரண்டாவது முறையாக நடத்தப்பட்டுள்ள இந்த போட்டியின் முக்கியத்துவம் என்ன?
இது மொழிகளின் வளர்ச்சிக்கு எந்த வகையில் உதவும்? இந்த போட்டியில் தமிழ்மொழி
முதலிடம் பெறுவதற்கு வித்திட்டவர்கள் யார், யார்? என்று இந்த கட்டுரை அலசுகிறது.

எதற்காக இந்த போட்டி?
நீங்கள் கூகுள் உள்ளிட்ட எந்த தேடுபொறியில் எந்தவொரு விடயத்தை தேடினாலும்
பெரும்பாலான சமயங்களில் முதல் முடிவாக விக்கிப்பீடியாவே காட்டப்படும். கட்டற்ற
கலைக்களஞ்சியமாக விளங்கும் விக்கிப்பீடியாவில் உலகின் பெரும்பாலான
மொழிகளில் எண்ணற்ற தலைப்புகளில் கட்டுரைகள் காணக்கிடைக்கின்றன.

துறைசார் வல்லுநர்கள் முதல் பொது மக்கள் வரை யார் வேண்டுமானாலும்
விக்கிப்பீடியாவில் புதிய தலைப்பில் கட்டுரை படைக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள
கட்டுரைகளில் மேலதிக தகவல்களை சேர்க்கலாம். அவை தக்க வழிமுறைகளுக்கு
பின்னர் பதிப்பிக்கப்படும்.

இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக விக்கிமீடியா - கூகுள் இணைந்து
நடத்தும் இந்த போட்டியின் முக்கிய நோக்கமே, குறிப்பிட்ட காலகட்டத்தில்
இணையத்தில் தமிழ் மொழியில் அதிகளவில் உள்ளடக்கங்களை உருவாக்குவதே என்று
கூறுகிறார் வேங்கைத் திட்டம் 2.0 குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும்,
மென்பொறியாளருமான நீச்சல்காரன் என்று அறியப்படும் இராஜாராமன்

"தமிழில் வேங்கைத் திட்டம் 2.0 என்றும் ஆங்கிலத்தில் டைகர் என்றும்
பெயரிடப்பட்டுள்ள இந்த போட்டியானது கடந்த அக்டோபர் 10ஆம் தேதி முதல் ஜனவரி
10ஆம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. ஒருபுறம்,
விக்கிப்பீடியாவில் எழுவது குறித்து சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் பயிற்சி
வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில், மற்றொரு புறம் எழுத ஆர்வம் இருந்தும் அதற்கு
வசதியில்லாத சுமார் 50 பேர் விண்ணப்பத்தின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு
அவர்களுக்கு மடிக்கணினி மற்றும் இணைய வசதி ஆகியவை இந்த திட்டத்தின்
வாயிலாக ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது."

வெற்றி சாத்தியமானது எப்படி?
2018-2019இல் நடைபெற்ற முதலாமாண்டு போட்டியில், தொடக்கம் முதலே அதிக
கட்டுரைகள் எழுதுவதில் இந்திய மொழிகளுக்கிடையே முன்னிலையில் இருந்து வந்த
தமிழ் மொழியை, கடைசி கட்டத்தில் பஞ்சாபி மொழி பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை
பெற்றது. அதே போன்று, இந்த ஆண்டும் தமிழ் - பஞ்சாபி ஆகிய மொழிகளுக்கிடையே
பலத்த போட்டி நிலவி வந்த சூழ்நிலையில் இந்த வெற்றி எப்படி சாத்தியமானது என்று
நீச்சல்காரனிடம் கேட்டோம்.

"முதலாம் ஆண்டில் கடைசி நேரத்தில் வெற்றியை இழந்தது தமிழ் விக்கிப்பீடியா
ஆர்வலர்களுக்கிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே, முதலாம்
ஆண்டை போலல்லாமல் இந்த ஆண்டு போட்டியில் திட்டமிட்டு செயல்பட
முற்பட்டோம். அந்த வகையில் பயிற்சி வகுப்புகளை நடத்துவது, எழுவதற்கான
வசதிகளை ஏற்படுத்தி தருவது, ஊக்கமளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில்
ஈடுபட்டோம். அதுமட்டுமின்றி, எதிர்பாராத வகையில், சில தனிப்பட்ட நபர்கள்
வியப்பளிக்கும் வகையிலான பங்களிப்பை அளித்ததே இந்த வெற்றிக்கு மிக முக்கிய
காரணம்," என்று அவர் கூறுகிறார்.

மூன்று மாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த போட்டியின் இறுதி முடிவுக்கு
சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 2,959 கட்டுரைகளுடன் தமிழ்
மொழி முதலிடமும், 1768 கட்டுரைகளுடன் பஞ்சாபி (குர்முகி எழுத்து வடிவம்)
இரண்டாமிடமும், அடுத்தடுத்த இடங்களை பெங்காலி, உருது, சந்தாளி, இந்தி உள்ளிட்ட
மொழிகளும் பெற்றன. இந்தியாவை பொறுத்தவரை இணையத்தில் அதிக
உள்ளடக்கங்களை கொண்ட மொழியாக விளங்கும் இந்தியில் 417 கட்டுரைகளை 26 பேர்
படைத்திருந்த நிலையில், தமிழ் மொழியில் அதைவிட 2,542 அதிக கட்டுரைகளை 62
பேர் படைத்தனர்.

முதலிடம் என்ற ஒற்றை நோக்கத்திற்காக எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு
செயல்பட்டதால் இந்த போட்டிக்காக படைக்கப்பட்ட உள்ளடக்கங்களின் தரம்
பாதிக்கப்பட்டதா என்று அவரிடம் கேட்டபோது, "இந்த போட்டியின் நோக்கமே
காலத்திற்கும் இணையத்தில் நிலைத்து நிற்கும் நம்பத்தகுந்த உள்ளடக்கங்களை
படைப்பதுதான். எனவே, இதை உறுதிசெய்யும் வகையில் போட்டி விதிமுறைகள்
வகுக்கப்பட்டிருந்தன. அதாவது, இந்த போட்டியில் பங்குபெறுபவர்கள் எந்தெந்த
தலைப்புகளின் கீழ் கட்டுரைகளை படைக்கலாம் என்ற பரிந்துரையை கூகுள் நிறுவனம்
மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கலந்துரையாடி முடிவு செய்தோம்" என்று அவர்
கூறுகிறார்.

"ஒரு கட்டுரை குறைந்தபட்சம் 300 சொற்களை கொண்டதாக இருக்க வேண்டும் என்பது
அடிப்படை விதி. மேலும், கட்டுரையில் போதிய அளவு தக்க சான்றுகள் இடம் பெற
வேண்டும். எந்திர மொழிபெயர்ப்புகள் ஏற்கப்பட மாட்டாது; பதிப்புரிமை சிக்கல்கள்
இருக்கக் கூடாது. ஒரு ஒருங்கிணைப்பாளர் எழுதியதை மற்றொருவர் சரிபார்க்க
வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் கவனமாக பின்பற்றப்பட்டன."எதிர்காலத்தில் விக்கிப்பீடியாவை போன்று தமிழ் மொழிக்கென தனிப்பட்ட இணையதளத்தை உருவாக்கும்போது ஏற்கனவே படைக்கப்பட்டுள்ள உள்ளடகங்களையும் பயன்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

"விக்கிப்பீடியாவில் இருக்கும் கட்டுரைகளை யார் வேண்டுமானாலும் எவ்வித கட்டுப்பாடுமின்றி எடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் பலரும் விக்கிப்பீடியாவில் தமிழ் மொழியின் உள்ளடக்கத்தை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒருவேளை, விக்கிப்பீடியா போன்று தமிழ் மொழிக்கென தனி இணையதளம் ஒன்று எதிர்காலத்தில் உருவாக்கப்படும் பட்சத்தில், அதில் விக்கிப்பீடியாவில் இருக்கும் அனைத்து உள்ளடக்கங்களையும் எவ்வித சிக்கலுமின்றி பயன்படுத்திக் கொள்ள முடியும்" என்று நீச்சல்காரன் உறுதியளிக்கிறார்.