இனி இன்னொரு பக்கம் பார்க்கலாம்: ஓய்வு பெற்ற ராயுடு உருக்கம்

இனி இன்னொரு பக்கம் பார்க்கலாம்: ஓய்வு பெற்ற ராயுடு உருக்கம்
இனி இன்னொரு பக்கம் பார்க்கலாம்: ஓய்வு பெற்ற ராயுடு உருக்கம்

சென்னை: இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான அம்பாதி ராயுடு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐபிஎல் கோப்பையை வென்ற சிறப்பான உணர்ச்சிகரமான இந்த இரவில், அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் நான் ஓய்வை அறிவிக்க விரும்புகிறேன். சிறுவயதில் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடியபோது தொடங்கிய இந்த பயணம், இப்படி 2 தசாப்தங்களாக நீடிக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. இந்திய யு-19 அணியில் களம் இறங்க வாய்ப்பு கிடைத்ததை பெரிய கவுரமாக நினைக்கிறேன். 2013ல் இந்திய அணிக்கான தொப்பியை வாங்கியது எப்போதும் எனது நினைவில் பசுமையாக இருக்கும்.

இந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம், ஆந்திரா, ஐதராபாத், விதர்பா, பரோடா கிரிக்கெட் சங்கங்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கும், களத்தில் எனது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு அளித்ததற்கும் நன்றி. கூடவே நான் விளையாடிய ஐபிஎல் அணிகளான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் என 2 அணிகளுக்கும் நன்றி. எனது கிரிக்கெட் வாழ்க்கையை 6 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்ற வீரனாக முடித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடி தலா 3 முறை கோப்பை வென்ற தருணங்கள் எப்போதும் எனது நெஞ்சில் இருக்கும்.