நாளை நடக்கும் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி: அசாம் மாநிலம், கவுகாத்தியில் நடைபெறுகிறது

 நாளை நடக்கும் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி: அசாம் மாநிலம், கவுகாத்தியில் நடைபெறுகிறது

அசாம் மாநிலம், கவுகாத்தியில் நாளை நடக்கும் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை மாலை 7 மணிக்கு கவுகாத்தி நகரில் உள்ள பர்சாபாரா மைதானத்தில் நடக்கிறது.

நாளை போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்கு அசாம் மாநில கிரிக்கெட் அமைப்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, சிக்ஸர், பவுண்டரிகளை உணர்த்தும் போஸ்டர்களை ரசிகர்கள் எடுத்து வரவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரர்களின் பெயர்களை எழுதும் போஸ்டர்களை எடுத்து வரவும், மார்க்கர் பேனா போன்றவற்றைக் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அசாம் மாநிலத்தில் கடுமையாகப் போராட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த ஆட்டம் நடக்கிறது. இதனால், யாரேனும் போஸ்டரில் சிஏஏ குறித்து சர்ச்சைக்குரிய வகையில் எழுதிக் காண்பிக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அசாம் கிரிக்கெட் அமைப்பின் செயலாளர் தேவாஜித் சர்க்கார் கூறுகையில், "சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பதால், அனைவரும் விழிப்புடன் இருந்து வருகிறோம். தேவையான அளவுக்கு போலீஸார் பாதுகாப்பு கேட்டு இருக்கிறோம்.

உள்ளூர் மக்களைத் தவிர்த்து வெளியூர் மக்களும், வெளி மாநில மக்களும் அதிகமாக வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதுவரை 27 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன" எனத் தெரிவித்தார்.