தொன்மைத் தமிழரின் ஈமச்சின்னமான கற்திட்டைகள் ​- ஆக்கம்: ஆறகளூர் பொன்.வெங்கடேசன்

தொன்மைத் தமிழரின் ஈமச்சின்னமான கற்திட்டைகள் ​- ஆக்கம்: ஆறகளூர் பொன்.வெங்கடேசன்

​மனிதகுல வரலாற்றில் பெருங்கற்காலம் (Megalithic period / இரும்புக்காலம்) என்பது மிகவும் முக்கியமான ஒரு காலக்கட்டமாகும். இறந்த தங்களின் முன்னோர்களுக்குப் பெரிய கற்களைக் கொண்டு நினைவிடங்களை அல்லது ஈமச்சின்னங்களை அமைக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. அவ்வாறு அமைக்கப்பட்ட ஈமச்சின்னங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் 'கற்திட்டை'. இதனை ஆங்கிலத்தில் “Dolmen” (டால்மென்) என்று அழைக்கின்றனர்.

​கற்திட்டையின் அமைப்பு

தரைக்கு மேலே பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்படும் இந்த கற்திட்டைகள், பார்ப்பதற்குப் பிரம்மாண்டமான ஒரு கல் மேசையைப் போன்று காட்சியளிக்கும். நான்கு புறமும் ஒவ்வொன்றாக நான்கு பெரிய கற்பலகைகளைச் (Orthostats) செங்குத்தாக நிறுத்தி, அவற்றின் மீது ஒரு மிகப்பெரிய கற்பலகையை மூடுகல்லாக (Capstone) அமைத்திருப்பார்கள். சில இடங்களில் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட கற்பலகைகளும், பல இடங்களில் இயற்கையாகக் கிடைக்கும் செதுக்கப்படாத கரடுமுரடான கற்பாறைகளும் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

​ஸ்வஸ்திகா அமைப்பு

இந்தக் கற்பலகைகள் நேராக நிறுத்தப்படாமல், ஒன்றின் மீது ஒன்றாகச் சற்று சரிவாகச் சாய்த்து வைக்கப்படுகின்றன. எனவே, ஒரு கற்பலகையின் முனை, அதன் அடுத்துள்ள கற்பலகையின் முனையைக் காட்டிலும் சற்று நீண்டு காணப்படும். மேலிருந்து பார்க்கும்போது இது ஒரு 'ஸ்வஸ்திகா' வடிவில் தோற்றமளிக்கும். தொல்லியல் ஆய்வாளர்கள் இதனை 'ஸ்வஸ்திகா அமைப்பு' (Swastika pattern) என்று குறிப்பிடுகின்றனர். கற்திட்டைகள் பார்ப்பதற்குக் கற்பதுக்கைகளை (Cist) போலவே இருந்தாலும், கற்பதுக்கைகள் பெரும்பாலும் பூமிக்கு அடியில் அமைக்கப்படுபவை; ஆனால் கற்திட்டைகள் முழுமையாகத் தரையின் மேல்பகுதியில் அமைக்கப்படுபவை ஆகும்.

​சிறப்புக்கூறுகள் மற்றும் இடுதுளை

எல்லா கற்திட்டைகளும் நான்கு பக்கங்களால் மூடப்பட்டிருப்பதில்லை. சில கற்திட்டைகளில், மூன்று பக்கங்களில் மட்டும் கற்பலகைகளைக் கொண்டு, ஒரு பக்கம் திறந்தவாறு காணப்படும்.

​இதன் மற்றொரு முக்கிய சிறப்பம்சம் 'இடுதுளை' (Porthole) ஆகும். சில கற்திட்டைகளின் ஒரு பலகையில் (பொதுவாகக் கிழக்கு நோக்கிய பலகையில்), வட்ட அல்லது நீள்வட்ட வடிவில் ஒரு துளை காணப்படும். இறந்தவர்களின் ஆன்மா தடையின்றி வந்து செல்வதற்காகவோ அல்லது நினைவுச் சடங்குகளின்போது படையல் பொருட்களை (மட்பாண்டங்கள், தானியங்கள்) உள்ளே செலுத்துவதற்காகவோ இந்த இடுதுளைகள் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

​எங்கே காணப்படுகின்றன?

பொதுவாக இத்தகைய கற்திட்டைகள் மலைகள், பாறைகள் நிறைந்த குன்றுகள் மற்றும் சரிவுகளிலேயே அதிகம் காணப்படுகின்றன. தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 'மல்லசந்திரம்' என்னும் ஊர் கற்திட்டைகளுக்கு மிகவும் புகழ்பெற்ற இடமாகும். அங்கு நூற்றுக்கணக்கான கற்திட்டைகள் ஒரே இடத்தில் இருப்பதைக் காண முடியும். இதுதவிர கிருஷ்ணகிரி, நீலகிரி, கொடைக்கானல், பழனி மலைத்தொடர் உள்ளிட்ட பல மலைப்பகுதிகளிலும் இந்த ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன.

​வரலாற்று முக்கியத்துவம்

இறந்தவர்களின் எலும்புகளைச் சேகரித்து, அவர்களது பயன்பாட்டுப் பொருட்களான இரும்பு ஆயுதங்கள், கருப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து இந்தக் கற்திட்டைகளுக்குள் வைத்து நமது முன்னோர்கள் அடக்கம் செய்துள்ளனர் (Secondary Burial). நவீன இயந்திரங்கள் ஏதுமில்லாத பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பல டன் எடையுள்ள பாறைகளை மலைகளின் மீது கொண்டுசென்று ஈமச்சின்னங்களை எழுப்பிய தொல்குடித் தமிழர்களின் தொழில்நுட்ப அறிவும், உழைப்பும் வியப்பிற்குரியவை. மூதாதையர் வழிபாட்டின் (நடுகல் வழிபாட்டின்) முன்னோடியாகத் திகழும் இந்தக் கற்திட்டைகள், நமது தமிழ்ச் சமூகத்தின் தொன்மையான வரலாற்றையும் பண்பாட்டையும் பறைசாற்றும் அரிய பொக்கிஷங்களாகும். இவற்றை அழியாமல் பாதுகாப்பது நமது கடமையாகும்.