'பன் பட்டர் ஜாம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

‘பன் பட்டர் ஜாம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
கல்லூரி மாணவரான நாயகன் ராஜு, தனது சக மாணவியான நாயகி பவ்யா ட்ரிகாவை காதலிக்கிறார். ஆனால், அவரது அம்மா சரண்யா பொன்வண்ணன், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆதியாவுக்கும், ராஜுக்கும் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டு, அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். ஆதியா விஜே பப்புவை காதலிக்கிறார். இதற்கிடையே, ராஜுவின் உயிர் நண்பனான மைக்கேல் தன் காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் ராஜுவிடம் இருந்து விலகிச் செல்கிறார். இத்தகைய சூழ்நிலையில் ராஜுவின் காதல் ஜெயித்ததா ? என்பதை தற்போதைய காலக்கட்ட இளைஞர்கள், காதல், நட்பு ஆகியவற்றை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள், என்ற கோணத்தில் சொல்வது தான் ‘பன் பட்டர் ஜாம்’.
நாயகனாக நடித்திருக்கும் ராஜு, எதார்த்தமாக நடித்திருப்பதோடு, காமெடிக் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். அதே சமயம், படத்தின் ஆரம்பத்தில் ஹீரோவாக பார்வையாளர்களை ஈர்ப்பவர், திரைக்கதையின் திருப்பங்களின் போது கதாபாத்திரங்களில் ஒருவராக கலந்து, கதாநாயகன் என்ற அந்தஸ்தை இழந்து விடுகிறார். கதையின் போக்கும் அவ்வாறே பயணிப்பதால் நாயகன் ராஜு காணாமல் போய்விடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பவ்யா ட்ரிகா அழகிலும், நடன அசைவுகளிலும் கவனம் ஈர்ப்பதோடு, நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். பவ்யாவுக்கு இணையாக நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கும் மற்றொரு நாயகி ஆதியா தனது துறுதுறு நடிப்பு மற்றும் உடல்மொழி மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கிறார்.
ஆதியாவின் காதலனாக நடித்திருக்கும் விஜே பப்பு, வரும் காட்சிகளில் சிரிப்பு சத்தம் காதை பிளக்கிறது. நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் மைக்கேலின் நடிப்பிலும் குறையில்லை.
சரண்யா பொன்வண்ணன், தேவர்தர்ஷினி, சார்லி ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்தாலும், அவர்கள் வழக்கமாக செய்வதை கொஞ்சம் ஓவராக செய்து பார்வையாளர்களை சற்று சலிப்படைய வைத்துவிடுகிறார்கள்.
கெளரவ வேடத்தில் நடித்திருக்கும் விக்ராந்த், வரும் காட்சிகள் மாஸாக இருக்கிறது.
நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். பின்னணி இசை முதன்மை கதாபாத்திரங்களிடம் இருக்கும் இளமைக்கு ஏற்ப பயணித்து பார்வையாளர்களை பரவசமடைய செய்கிறது.
ஒளிப்பதிவாளர் பாபு குமார்.ஐ.இ, படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் ராகவ் மிர்தாத், தற்போதைய இளைஞர்கள் காதல், நட்பு, பெஸ்ட்டி, காதல் திருமணம், பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட உறவுகளை பார்க்கும் விதமும், அதனால் பாதை மாறும் வாழ்க்கையையும் விவரிக்கும் வகையில் கதை, திரைக்கதை அமைத்திருக்கிறார்.
2கே கிட்ஸின் காதலையும், அவர்கள் குடும்ப உறவுகள் மற்றும் நட்பை பார்க்கும் விதத்தையும் ரசிக்கும்படி சொல்லியிருக்கும் இயக்குநர், காமெடி காட்சிகள் மூலம் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார். அதே சமயம், இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் சில காட்சிகள் சிலருக்கு பிடித்திருந்தாலும், சற்று முகம் சுழிக்க வைக்கிறது.
நல்ல கதையாகவும், நகைச்சுவை, காதல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நிறைவாக காட்டக்கூடிய கதைக்களத்தை நேர்த்தியாக கையாண்டிருக்கும் இயக்குநர் ராகவ் மிர்தாத், எதிர்பார்க்காத வித்தியாசமான கிளைமாக்ஸ் மூலம் இளைஞர்கள் சுவைக்கும் ‘பன் பட்டர் ஜாம்’ ஆக கொடுத்திருக்கிறார்.
இயக்குநர் ராகவ் மிர்தாத் மற்றும் படக்குழுவினருக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.