எங்களது யுக்தியை களத்தில் செயல்படுத்த தவறி விட்டோம் - இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட்

எங்களது யுக்தியை களத்தில் செயல்படுத்த தவறி விட்டோம் - இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட்

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் கூறுகையில், 'இந்தியா 240 ரன்கள் குவித்தது. எங்களது யுக்தியை களத்தில் செயல்படுத்த தவறி விட்டோம். இந்த இலக்கை எட்டி விடலாம் என்று நம்பினோம். ஏனெனில் இதற்கு முன்பு நாங்கள் மெகா ஸ்கோரை வெற்றிகரமாக விரட்டிபிடித்திருக்கிறோம். காயத்தால் இவின் லீவிஸ் ஆட முடியாமல் போனது பின்னடைவை ஏற்படுத்தியது. அது போல் எங்களது திட்டமிடலை சரியாக நிறைவேற்ற முடியவில்லை. இதில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்.

மற்றபடி ஒரு பேட்டிங் குழுவாக இந்த தொடர் முழுவதும் நாங்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். இதை சாதகமான அம்சமாக எடுத்துக் கொண்டு, சரியான பாதையில் பயணிப்பதாக கருதுகிறேன். 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தாலும் அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இருக்கிறது. அதில் சாதிப்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்' என்றார்.