மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் - பிரிஜ் பூஷன் சிங் கருத்து

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் - பிரிஜ் பூஷன் சிங் கருத்து
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் - பிரிஜ் பூஷன் சிங் கருத்து

புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கையில் வீச முடிவெடுத்து, பின்னர் அதனை கைவிட்டது குறித்து பிரிஜ் பூஷன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ்போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் போாரட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 28-ம் தேதி, புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற இவர்களை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்காக போடப்பட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டன. இதையடுத்து தாங்கள் பெற்ற பதக்கங்களை நேற்று(மே 30) மாலை 6 மணிக்கு கங்கையில் வீசப்போவதாக சாக்சி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் ட்விட்டரில் தெரிவித்திருந்தனர். மேலும், ‘‘இந்த பதக்கங்கள்தான் எங்கள் வாழ்வு, ஆன்மா. இவற்றை கங்கையில் வீசியபின் உயிர்வாழ்வதில் அர்த்தம் இல்லை. நாங்கள் இந்தியா கேட் பகுதியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போம்’’ என தெரிவித்தனர். ‘‘போலீஸார் தங்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாகவும், ஆனால் பாலியல் தொந்தரவு கொடுத்தவர் பொதுக் கூட்டங்களில் எங்களை தாக்கி பேசுகிறார்’’ எனவும் அவர்கள் கூறினர்.

கங்கையில் பதக்கங்களை வீசும் முடிவு குறித்து ஹரித்துவார் எஸ்எஸ்பி அஜய் சிங் அளித்த பேட்டியில், ‘‘கங்கா தசராவை முன்னிட்டு ஹரித்துவாரில் புனித நீராட 15 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். இங்கு போராட்டத்தில் ஈடுபடும் மல்யுத்த வீரர்கள் வர விரும்பினால் தாராளமாக வரலாம். அவர்கள் கங்கையில் பதக்கங்களை வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம். அவர்களை தடுக்க வேண்டும் என எங்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை’’ என்றார்.

இந்நிலையில் மல்யுத்த வீராங்கனைகள், தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீச நேற்று மாலை ஹரித்துவார் வந்தனர். கண்ணீருடன் கங்கைக் கரைக்கு சென்ற அவர்களை, உள்ளூர் மக்களும், விவசாய சங்கத்தினரும் சமாதானப்படுத்தினர். பல ஆண்டு கடின உழைப்பால் கிடைத்த பதக்கங்களை கங்கையில் வீசினால், 2 ஒலிம்பிக் பதக்கங்களையும், காமன்வெல்த் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற பல பதக்கங்களையும் நாடு இழக்க வேண்டியிருக்கும். அதனால் பதக்கங்களை கங்கையில் வீச வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இதையடுத்து பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை மல்யுத்த வீராங்கனைகள் நிறுத்தினர். மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அவர்கள் 5 நாள் கெடு விதித்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள பிரிஜ் பூஷன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். "மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றச்சாட்டில் உண்மை இருப்பின் அவர்கள் என்னை கைது செய்வார்கள். பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக அவர்கள் அறிவித்தார்கள். பிறகு விவசாய சங்கத் தலைவர் திகாயத்திடம் அவற்றை கொடுத்திருக்கிறார்கள். இது அவர்கள் எடுக்கும் முடிவு. நான் என்ன செய்ய முடியும்?" என பிரிஜ் பூஷன் சிங் தெரிவித்துள்ளார்