ஜெயா டிவி வழங்கும் மார்கழி உத்சவம் 2024 25ம் ஆண்டு கர்நாடக சங்கீத விழா
ஜெயா டிவி கடந்த 25 ஆண்டுகளாக ‘மார்கழி உத்சவம்’ என்ற கர்நாடக சங்கீத விழாவை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது.
டி.என்.சேஷகோபாலன், சுதா ரகுநாதன், அருணா சாய்ராம், நித்யஸ்ரீ மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, செளம்யா, பி.உன்னிகிருஷ்ணன், ரஞ்சனி & காயத்ரி உள்ளிட்ட தென்னிந்தியாவின் தலைசிறந்த இசை மேதைகள் மார்கழி உத்சவம் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டுகளில் பங்கேற்றுள்ளார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு பொருளை (theme) மையமாக கொண்டு மார்கழி உத்சவத்தில் கச்சேரிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் இந்த வருடம் ‘தமிழிசை’ என்ற பொருளில் கலைஞர்கள் இசைக்கவிருக்கிறார்கள். ஒரு பாடகர் அல்லது ஒரு இசைக்கருவி வாசிப்பவர்களின் கச்சேரி முழுவதும் தமிழ் பாடல்கள் (கீர்த்தனைகள்) மட்டுமே இடம்பெறும்.
ஒவ்வொரு இசை நிகழ்ச்சி (episode) தொடங்குவதற்கு முன்பும் அன்று இடம்பெறப்போகும் இசைக்கலைஞரின் சிறப்புகள் மற்றும் தனித்தன்மை குறித்து பாடகி சுசித்ரா பாலசுப்ரமணியம் நேயர்களுக்கு விளக்குவார்.
ஆழ்வார்கள், நாயன்மார்கள், முத்துதாண்டவர், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, கோடீஸ்வர ஐயர், சுப்ரமணிய பாரதியார், கோபால கிருஷ்ண பாரதியார், வள்ளலார், பாபநாசம் சிவன் போன்ற பல மகான்களின் பாடல்களை கலைஞர்கள் இசைக்கவிருக்கிறார்கள்.
இந்த இனிமையான இசைக்கச்சேரிகளை மஹதி, பரத் சுந்தர், கீர்த்தனா ஸ்ரீராம், ஐஸ்வர்யா & செளந்தர்யா சகோதரிகள், கிருத்தி விட்டல், ஜே.ஏ.ஜெயந்த் (புல்லாங்குழல்), சுப்பலட்சுமி & சொர்ணலதா சகோதரிகள் (வயலின்) உள்ளிட்ட முன்னணி கலைஞர்கள் இவ்வாண்டு இசைக்கவிருக்கிறார்கள்.
இவை தவிர ‘ஹரிகதா’ என்று அழைக்கபடும் சங்கீத உபன்யாசங்களும் மார்கழி உத்சவத்தில் இடம்பெறுகின்றன. இதனை விசாகா ஹரி மற்றும் உ.வே.துஷ்யந்த் ஸ்ரீதர் வழங்கவிருக்கிறார்கள்.
மார்கழி உத்சவம் நிகழ்ச்சி டிசம்பர் 16 முதல் ஜனவரி 13 வரை தினமும் காலை 7.30 மணிக்கும், மீண்டும் இரவு 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகும். சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரவு 9.30க்கு ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சி நேயர்களுக்கு ஒரு இசை விருந்தாக அமையும்.