தாய்லாந்து கேளிக்கை விடுதியில் தீ விபத்து – 27 பேர் உயிரிழப்பு
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பேங்காக் நகரின் சத்துசாக் பகுதியில் உள்ள ஒரு பிரபல இரவு நேர கேளிக்கை விடுதியில் (Na Ladprao Pub) திங்கட்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 63 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விடுதியில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, மேடைக்கு அருகில் இருந்த மின்சுற்றுப் பலகையில் (Circuit Breaker) இருந்து திடீரென புகை கிளம்பி, மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், அடுத்த சில நொடிகளில் பலத்த சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டு தீ மளமளவெனப் பரவியதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவு நேரம் என்பதால், தீயின் பிடியில் இருந்து தப்பிக்க வாடிக்கையாளர்கள் அலறியடித்தபடி முன்பக்கக் கதவு வழியாக ஓட முயன்றபோது, கரும்புகையும் நச்சு வாயுவும் அந்த அரங்கு முழுவதும் 100 சதவீதம் சூழ்ந்துகொண்டது. இதனால் வெளியேறும் வழியைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்த பலரும், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விடுதியின் பின்புறம் இருந்த கழிவறைப் பகுதிக்கு ஓடி அங்கேயே மூச்சுத்திணறி உயிரிழந்ததாகத் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், காயமடைந்தவர்களில் 22 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது